அன்றொரு நாள் தேவா சொன்னது போல் சாருமதிக்கு அவர்கள் வீட்டின் மாடியிலிருந்த அறையில் கண்ணாடிகள் பதித்து ஏரோபிக் வகுப்பு எடுக்க வசதியாக இருக்கும்படி கட்டிக் கொடுத்திருந்தான்.
தினமும் காலையும் மாலையும் ஒரு மணிநேரம் ஏரோபிக் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறாள் சாருமதி. அகாடமி போல் இங்கு அவ்வளவாக ஆட்கள் வரவில்லை. காலையும் மாலையும் சேர்த்தே நான்கு நபர்கள் மட்டும் தான் வந்துக் கொண்டிருந்தனர்.
இந்த இரண்டு வகுப்பையே அவளின் ஒருவயது மகனை தூங்கவைத்தோ அல்லது செல்வராணியிடம் கொடுத்துவிட்டோ தான் எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவன் கொஞ்சம் வளர்ந்ததும் ஆன்லைனிலும் எடுக்க திட்டமிட்டிருக்கிறாள்.
இது ஒரு புறமென்றால் அவளின் யூடியூப்பும் ஒருபுறம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அவளின் சேனலில் சிறுதானியத்தில் செய்யும் உணவு வகைகளையும் பதிவேற்ற தொடங்கியிருந்தாள்.
கோமதி, ஜெயந்தி, செல்வராணி என அனைவரிடமும் எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டு, செய்து பார்த்துவிட்டே சேனலில் பதிவேற்றுகிறாள். இந்த வீடியோவும் அவளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
என்னதான் தேவா கோபத்தில், ‘உன்னுடைய யூடியூப் விஷயத்தில் இனி தலையிடமாட்டேன்!’ என்றிருந்தாலும் வாரம் ஒருமுறை அவளின் அக்கவுன்டை சரிபார்த்துக் கொள்வான்.
அவன் அன்று கோபத்தில் சப்ஸ்க்ரைப் செய்ததையும் எடுத்துவிட்ட சாருமதி, “நீங்க நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி லட்சத்துல ஒருத்தரா இருக்க வேணாம்! எனக்கே எனக்கானவரா.. என்னவரா மட்டும் இருங்க தேவ்!” என்றும் அவனிடம் கூறி அவனையும் காதலால் கட்டிவைத்துக் கொண்டாள்.
மேலும், வீடியோ எடிட் செய்யவென்றே அவளின் தோழி ஒருத்தியை சாருமதி உதவிக்கு வைத்திருக்கிறாள். பகல் வேளையில் சாருமதி வீடியோ எடுத்துவிட்டாள் அதனை யூடியூபில் போஸ்ட் பண்ணுவதற்கு ஏற்றவாறு அவளின் தோழி எடிட் செய்துக் கொடுத்துவிடுவாள்.
இதனால் சாருமதிக்கு அவளின் குழந்தைகளுடனும் தேவாவுடனும் செலவிடும் நேரமும் அதிகமாகியது. அதற்கான தொகையையும் அவளின் தோழிக்கு கொடுத்துவிடுவாள்.
சேனல் ஹக்காகிய சமயம் அவளின் அன்னையும் பாட்டியும் மிகவும் பயந்துவிட்டனர். “இதோட இதை மூட்டை கட்டி வெச்சிட்டு வேற வேலை இருந்தா பாரு சாரு” என்று அதட்டலுடன் அவர்களின் பயத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் தேவா தான் முழுமூச்சாக அவளுக்கு துணை நின்று சேனலை மீட்டு கொடுத்தான். அந்நேர கோபத்திலும் வருத்தத்திலும் தேவாவை பேசிவிட்டாலும், சாருமதிக்கு தேவாவை விட வேறெதும் பெரிதாக தெரியவும் இல்லை.
அன்று உணர்ந்தாள் இந்த சமூக வலைத்தளம் எல்லாம் பொழுதுபோக்கிற்காக மட்டுமானதே என்று! அதனையே வாழ்க்கையாக எடுக்க கூடாது என்றும் கற்றுக்கொண்டாள், சாருமதி.
ஆனால் சேனல் கிடைத்ததும், அவள் வளர்த்த சேனலை அப்படியே விட்டுவிடாமல், உதவிக்கு ஆள் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறாள்.
சாருமதிக்கு குறை என்றால் அதிகம் யோசிப்பது மட்டுமே! ஆனால் அதையும் குறையாக பார்க்காமல் அவளின் இயல்பாக எடுத்துக்கொண்ட தேவாவை அவளின் வாழ்வின் வரமாகவே கருதினாள்.
இப்பொழுதெல்லாம் அவள் அவர்கள் இருவரை பற்றி அதிகம் யோசிப்பதே இல்லை! ஆனால் அவர்களுள் இருந்து வந்த குழந்தைகளை பற்றி மட்டுமே அவளின் சிந்தனை வலம்வந்து கொண்டிருக்கிறது.
மாலை அலுவலகத்தில் இருந்து வந்த தேவாவை வரவேற்றது அரவிந்த் மற்றும் வந்தனாவின் வருகை. அரவிந்த் வரவேற்பறையில் அமர்ந்திருக்க வந்தனா உள்ளே இருந்தாள். “வாங்க அரவிந்த்!” என அரவிந்தை வரவேற்றுவிட்டு அறைக்குள் சென்று மறைந்தான், தேவா.
ஒரு வயது மகன் மகேந்திரனை மடியில் தட்டிக்கொடுத்து தூங்க வைத்து கொண்டிருந்த மனைவியை பார்த்தபடியே குளியறைக்குள் நுழைந்தான் தேவா.
அவர்களின் புதல்வனுக்கு மகேந்திரன் என்று பெயரிட்டிருந்தனர். தேவேந்திரன் என்னும் தேவாவின் பெயரை கொண்டே மகேந்திரன் என்று சாருமதி தான் தேர்வு செய்தாள்.
மகேந்திரன் பிறந்த சமயம், “இப்ப நீ என்ன பண்ணிட்டு இருக்க மதி?” என்று குழந்தைகளை ஒப்பிட்டு சொன்னவளை நோக்கி தேவா கேட்ட கேள்விக்கு,
“சும்மா தான் விளையாட்டுக்கு சொன்னேன் தேவ்” என்றவளை நக்கலாக பார்த்து, “அத்தையும் அப்படி தான சொல்லிருப்பாங்க?” என்றவனின் கேள்வி யோசிக்க வைத்தது.
“அத்தைனு மட்டும் இல்லை மதி, பல வீடுல இது நடக்கிறது தான். ரெண்டு குழந்தையும் ரெண்டு துருவமா இருக்குனு சொல்லுறது, அவங்கள ஒப்பிட்டு சொல்லுறது கிடையாது மதி! அப்பா மாதிரி நீ, அம்மா மாதிரி நீன்னு சொல்லுறதெல்லாம் அவங்களோட அன்பின் வெளிப்பாடு. அப்படி சொல்லி பெருமை பட்டுக்குவாங்க. ஆனா அதுவும் ஒரு எல்லைக்குள் இருக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லை மதி” என்று பொறுமையாக எடுத்து சொன்னான்.
‘ஆமாம் தானே! சாருமதி கூட இரண்டு குழந்தைகளிடமும் தேவாவின் சாயல் தெரிகிறதா? தன் சாயல் தெரிகிறதா? என்று அவர்கள் விழியின் மொழி, நடையின் அழகு, உறங்கும் நிலை என அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறாளே!’
‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!’ என்னும் விதம் பிரசவத்திற்கு பின் வந்த மனஅழுத்தத்தில் அனைவரையும் பதட்டத்தில் வைத்திருந்தது அப்பொழுதுதான் அவளுக்கு உரைத்தது. அவளின் அன்னையிடம் மனப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டாள்.
“எங்க காலத்துலலாம் இப்படி இல்ல சாரு. இப்ப தான் எதுக்கெடுத்தலும் ஸ்ட்ரெஸ், மனஅழுத்தம்னு புதுசு புதுசா சொல்லிட்டு எல்லாரையும் பதற வைக்குறீங்க” என்று கொட்டிவிட்டே மகளை அரவணைத்து கொண்டார், ஜெயந்தி.
தேவா முகம் கழுவி உடைமாற்றி புத்துணர்வாய் வந்தான். சாருவின் மடியில் உறங்கிய குழந்தையை உச்சி முகர்ந்தவனை இம்சித்தது அருகில் பளபளத்த மனைவின் பட்டு கன்னம். குழந்தையும் உறங்கியிருக்க மெல்ல அவளை நெருங்கியவன் அவளின் கன்னத்தில் இதழ் பதித்தான்.
“தேவ்..” என்று அவள் அதிர்ந்து அவனை விலக்கும் முன்,
“அத்தையோட கன்னத்துல மாமா முத்தம் கொடுத்துட்டாரு..” என்று கட்டிலுக்கு அந்த பக்கம் அவ்வளவு நேரம் மறைந்திருந்து கண்ணாடியில் அவர்களை பார்த்துக் கொண்டிருந்த யஷ்வந்த் கத்திகொண்டே வெளியே ஓடினான்.
அதில் பதறி விலகிய தேவா, “இவன் எப்ப மதி உள்ள வந்தான்?” என்றான் மாட்டிக்கொண்ட படப்படப்புடன்.
அவளும், “ஆமா யாஷ். நான் தம்பியை கைல வெச்சிருக்கேன்ல அதான் மாமா ஊதினாங்க..” என்று அவளும் தேவாவிற்கு ஒத்து ஊதினாள்.
தெரியாதவங்க யாருக்கும் முத்தம் கொடுக்க கூடாது! யாரையும் முத்தம் கொடுக்கவிடக்கூடாது! என்று அவ்வப்பொழுது யஷ்வந்திடமும், வான்மதியிடமும் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறாள் சாருமதி. அப்படி இருக்கையில், ‘எங்கே இதை யஷ்வந்த் தவறாக புரிந்துக் கொள்வானோ?’ என்ற பதற்றம் அவளிடம் இருந்தது.
“ஓகே அத்தை” என்று அவன் முடிக்கும் முன், “அவுட்! யாஷ் அவுட்! யாஷை கண்டுபிடிச்சுட்டேன்!” என்று வான்மதி குதித்தாள். கத்தியபடியே அந்த இரண்டு வாண்டுகளும் ஓடிவிட்டன. ஆனால் அவர்களின் சத்தத்தில் குழந்தை முழித்துவிட்டது.
“என்ன தேவ்?” என்றவளின் மடியில் உள்ள குழந்தையை தூக்கிக்கொண்ட தேவா,
“வேறென்ன? இவனை மாதிரி ஒரு பையன் இருக்கிறப்ப ரெண்டாவது குழந்தை கஷ்டம் தான்” என்று கள்ள தனமாக சிரித்து வைத்தான்.
அவனை இரண்டு போட்டு, “எல்லாரும் வெளிய இருக்காங்க போங்க, நான் உங்களுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று துரத்திவிட்டாள்.
வெளியே வந்தனா, செல்வராணி, அரவிந்த் என அனைவரும் அமர்ந்திருந்தனர். தரையில் பாய் விரித்து குழந்தையை உட்காரவைத்தான் தேவா. குழந்தையை பார்த்ததும் இரண்டு வாண்டுகளும் வந்து குழந்தையுடன் அமர்ந்து விளையாட தொடங்கியது.
தேவாவின் கையில் காஃபியை கொடுத்த சாருமதியிடம், “எதுக்கு சாரு யாஷோட ஸ்கூல்ல வானுவை சேர்க்க வேணாம்னு சொல்லுற?” என்று தங்கையின் முகத்தை ஏறிட்டான் அரவிந்த்.
சாருமதி வந்தனாவை ஒரு பார்வை பார்த்தவள், “அது ரொம்ப தூரம்..” என்று அவள் முடிக்கும் முன்,
“ஸ்கூல் பஸ் இருக்கே சாரு” என்று அரவிந்தன் சொன்னான்.
“டெய்லி காலைல அரை மணி நேரம். ஈவ்னிங் அரை மணி நேரம் ட்ராவல் பண்ணுறது கஷ்டம் அண்ணா. வானு, குட்டி பாப்பா தான? இங்கயே பக்கத்துல சேர்த்து விடுறோம். இன்னும் ரெண்டு வருஷத்துல மகியையும் அங்கேயே சேர்க்க சரியா இருக்கும்” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்.
அவள் ஏன் மறுத்தால் என்று தேவா, வந்தனா, செல்வராணிக்கு மட்டும் புரிந்தது.
மகேந்திரன் பிறந்து ஆறு மாதம் முடிந்த நிலையில் அவனுக்கு தடுப்பூசி செலுத்த சாருமதியும் செல்வராணியும் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது.
அதனால், “வானுவை ப்ளே ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்து வெச்சிக்கோங்க அண்ணி. நாங்க வந்து கூப்பிட்டுக்குறோம். ஹாஸ்ப்பிட்டலுக்கு அவளையும் கூட்டிட்டு போக முடியாது” என்றாள் வந்தனாவிடம்.
வந்தனா அழைக்க சென்ற நேரம் வான்மதி ஒரு குழந்தையை அடித்ததாக பஞ்சாயத்து நடக்க குழந்தையை அழைத்து வந்தவள், “இனி பாப்பாவை என்னை போய் கூப்பிட சொல்லாதீங்க அண்ணி. அங்க ஒரு பையனை அடிச்சிட்டா அவங்க அம்மா என்னை திட்டினாங்க” என்று குறை படித்தாள்.
“அவங்க திட்டினா? நீ சும்மா வருவியா? வீட்டுல தான் வாய்” என மகளை கடிந்துவிட்டு,
“நீ எதுக்கு ராசாத்தி அவனை அடிச்ச?” என வான்மதியின் வாடிய முகத்தை வருடிய படி செல்வராணி கேட்டார்.
“அவன் தான் என்னோட முடியை பிடிச்சி இழுத்தான்..” என்ற குழந்தை உதட்டை பிதுக்கி அழுகைக்கு தயாரானாள்.
‘வானுவை இரண்டரை வயதிலே ப்ளே ஸ்கூல் சேர்க்க வேண்டுமா?’ என்று சாருமதி யோசித்திருக்கிறாள். ஆனால் அவளை தினமும் இரண்டு மணிநேரம் அனுப்பிவைத்தால் மட்டுமே சாருமதியால் மகேந்திரனை கவனிக்க முடிந்தது.
“அவன் முடியை பிடிச்சி இழுத்தா? நீ மிஸ் கிட்டதான் சொல்லணும் வானு. அடிக்க கூடாது!” என்று மகளை கண்டித்துவிட்டு, “அம்மா நாளைக்கு வந்து பேசுறேன்” என்று வானுவின் கண்களை துடைத்து மடியில் போட்டு கொஞ்சி சமாதானமும் செய்தாள்.
இரவில் தேவாவிடம், “உங்க தங்கச்சி என்ன பண்ணாங்க..” என்று தொடங்கியவளை ஒரு பார்வை தான் பார்த்தான்.
“சரி! அண்ணி என்ன பண்ணாங்க தெரியுமா?” என்று கேட்டு அனைத்தையும் கூறியவள், “இனிமே அவங்க கிட்ட என்னோட பசங்களை விடவே மாட்டேன்” என்று கத்திவிட்டு தான் ஓய்ந்தாள்.
இதுபோல் அவ்வப்பொழுது நடப்பது தான். வந்தனா எதாவது செய்தால், “இனி அவங்ககிட்ட பேசவே மாட்டேன்! எதுவும் கேட்க மாட்டேன்!” என்பவள் கொஞ்சநாளில் அதை காற்றில் பறக்க விட்டுவிடுவாள்.
எது நடந்தாலும் பதிலுக்கு பேசிவிட்டு தேவாவிடமும் குற்றப்பத்திரிக்கை வாசித்துவிடுவாள் சாருமதி. தேவாவிடம் குறை சொல்வது அவளுக்கு ஓர் அற்ப சந்தோசம் கிடைக்க, அதையே சாருவும் தொடர்கிறாள்.
தேவாவும் சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் சுட்டிக்காட்டி, எடுத்து சொல்ல வேண்டிய இடத்தில் பொறுமையாக எடுத்துச்சொல்லி அவளை அமைதிப்படுத்தி விடுவான்.
பிள்ளையிடம் சொன்னது போல் மறுநாளே ப்ளே ஸ்கூல் சென்று அந்த சிறுவனுடன் பேசி இருவரையும் நட்பு பாராட்ட வைத்துவிட்டே வந்தாள், சாருமதி.
அந்த சம்பவம் நடந்தத்தில் இருந்து, குழந்தைகள் விஷயத்தில் வந்தனாவிடம் ஓரளவுக்கு மேல் எந்த உதவியும் எதிர்பார்க்க மாட்டாள்.
‘இப்பொழுது ஒன்றாக குழந்தைகளை ஒரே பள்ளியில் படிக்க வைத்தால், நாளைக்கே வான்மதி எதாவது செய்தாலும் வந்தனா குறை சொல்லுவாள். அது தேவையில்லாத பிரச்சனை’ என்றெண்ணி அதனை முழுவதுமாக மறுத்து, அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.
இரண்டு குழந்தைகள் வந்ததும் தேவா-சாரு இருவரும் பேச கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால் எவ்வளவு வேலை இருந்தாலும், ‘இரவில் அரைமணி நேரமாவது நமக்கான நேரமாக ஒதுக்க வேண்டும்’ என்று முடிவெடுத்திருந்தனர்.
அதன்படி அரவிந்த், வந்தனா கிளம்பியபின் பிள்ளைகள் உறங்கியதும் கீழே பாய்விரித்து தேவா, சாரு இருவரும் கால் நீட்டி, கைகோர்த்து சுவரில் சாய்ந்தமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.
இரு குழந்தைகள் ஆனதும் அவர்களின் பெட்டில் நால்வர் படுக்க இடமில்லை. “பெரிய கட்டில் வாங்கலாமா தேவ்?” என்ற சாருமதியின் கேள்விக்கு,
“நோ. வேணாம் மதி. கட்டில் பெருசா இருந்தா இவங்க வளர்ந்தாலும் வேற ரூம்க்கு போக மாட்டாங்க” என்று கண்ணடித்து கூறியவனை இதழில் தோன்றிய சிரிப்புடன் முறைத்து வைத்தாள்.
பெரிய கட்டில் போடும் அளவிற்கு அவர்கள் அறையிலும் இடமில்லை. எனவே, தினமும் பிள்ளைகளுடன் சாருமதி மேலே படுத்துக்கொள்வாள். சில நேரம் குழந்தைகள் உறங்கியதும் கீழே தேவாவுடன் வந்து படுத்துக்கொள்வாள்.
கால் நீட்டி அமர்ந்திருந்த சாருமதி தேவாவின் தோளில் சாய்ந்து, “எனக்கு மட்டும் மூணு முத்து வெச்ச சின்ன கொலுசு! பாப்பாக்கு மட்டும் பெரிய மோகினி கொலுசு!” என்று அவனை வம்பிழுத்தாள்.
ஒருவாரம் முன்பு தான் இருவருக்கும் புதிதாக கொலுசு வாங்கி கொடுத்திருந்தான் தேவா. அன்று காலை தான் அதை அணிந்த சாரு அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“பாப்பா நடக்குறப்ப, ஓடுறப்ப எங்க இருக்கான்னு நமக்கு தெரியணும் மதி. ஒரு ஜிபிஎஸ் மாதிரி..” என்றவன் அவளின் காதருகே சென்று,
“உன்னோட கொலுசு சத்ததுக்கே ரெண்டு பேரும் முழிச்சிடுறாங்க. அதனால உன்னோட கொலுசு சத்தம் இனி எனக்கு மட்டும் கேட்டா போதும்” என்று சரசமாக கூறியபடியே அவளின் காலை அவனின் காலால் உரசினான்.
“அடப்பாவி ஃபிராடு!” என்று அவள் அவனின் புஜத்தில் குத்த அவர்களின் புதல்வன் அவனின் இருப்பை உணர்த்தினான். சிரிப்புடன் எழுந்த சாருமதி கட்டிலில் சென்று மகனுக்கு தட்டிக் கொடுத்தவாறே படுத்துக்கொண்டாள்.
“நீ அப்படியே தூங்கு மதி!” என்ற தேவா படுத்திருந்த மனைவியையும் மக்களையும் கண்ணுக்குள் நிறைத்து அவர்களுக்கு போர்த்திவிட்டு, முகத்தில் தோன்றிய நிறைவான புன்னகையுடன் கீழே படுக்கையில் விழுந்தான்.
இப்பொழுதும் இருவருக்குள்ளும் சண்டைகள் வருகிறது தான். ஆனால் பொங்கிய பாலில் தெளித்த நீராக அது அப்படியே அடங்கியும் விடுகிறது.
‘குழந்தைகள் முன்பு சண்டை போடக்கூடாது!’ என்பதால், அதிகமாக கத்தி சண்டையிடுவதையும் பிள்ளைகளுக்காக சாருமதி குறைத்துக் கொண்டாள்.
மறுநாள் விடியலில், ஏற்கனவே சாருமதி ஏற்பாடு செய்து வைத்திருந்த வீடியோ அவளின் யூடியூபில் பதிவேறியது.
“ஹலோ ஃப்ரெண்ட்ஸ்!
நீங்க பார்த்துக்கிட்டு இருக்குறது, ‘ஃபிட் வித் சாரு!’
நம்ம சேனலை பார்க்கிற எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய்!
ஒரு மாற்றமா இன்னைக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ தான் நம்ம சேனல்ல போட்டிருக்கேன்!
வாங்க நாம வீடியோக்குள்ள போகலாம்” என்று அந்த வீடியோ தொடங்கியது,
“சமீபகாலமா குழந்தைகளை குறிவெச்சி நடக்கிற வன்புணர்வை பார்த்து, பார்த்து ஒரு தாயா என்னோட மனசு கொந்தளிக்கிறது!
நம்ம குழந்தைகளோட பாதுகாப்பு நம்ம கைல மட்டுமில்லைங்க, நம்ம குழந்தைங்க கையிலும் தான் இருக்கு! அவங்கள நல்வழி படுத்தி பாதுகாப்பா வளர்க்கிறது மட்டுமில்லாம பிரச்சனை வரும் நேரத்துல தைரியமா எதிர்கொள்ள சொல்லி கொடுக்கிறதும் பெத்தவங்களான நம்ம கடமை தான்!” என்று தொடங்கியவள்,
“நம்ம வீட்ல இருக்க ஒரு ஒரு குழந்தைக்கும் கத்த சொல்லிக்கொடுக்கணும்! யாராவது உன்னை கடத்த முயற்சி பண்ணுறாங்களா? உன்கிட்ட தப்பா நடந்துக்க பார்க்கிறாங்களா? உன் விருப்பம் இல்லாம உன்கிட்ட பேசவோ நெருங்கவோ செய்யுறாங்களா? அந்த இடத்துலையே கத்தி உன்னோட மறுப்பை தெரிவிக்கனும்னு சொல்லிக்கொடுக்கணும்!
உன்னோட பக்கத்துல இருக்க கல்லும் மண்ணும் கூட ஆயுதம் தான். எதிரியை பார்த்து பயபடாம அதை தைரியமா உபயோகிக்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும்!
பள்ளி, கல்லூரி சொல்கின்ற பிள்ளைகளிடம் உள்ள டிஃபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், காம்பஸ் கூட அவங்களுக்கு ஆபத்து வரும்பொழுது ஆயுதமா மாற்றி புத்திசாலித்தனமா உபயோகித்து தப்பிக்க சொல்லிக்கொடுக்கணும்!” என்று நிதானமாக அதே சமயம் அழுத்தமாகவும் சொன்னாள்.
“தண்டனைகள் கடுமையாக்கினால் தான் தவறுகள் குறையும்னு சொல்லுறாங்க. ஆனா நான் பண்ணன்டு வருஷம் முன்னாடி பார்த்த நிர்பயா கேஸும், இப்ப ஒன்பது வயது சிறுமிக்கு நடந்த குற்றத்திலும் தண்டனைகள் எங்க கடுமையாக்கப்பட்டிற்கு???” என ஆவேசமாக கேட்டவள்,
“குழந்தைகளை பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்னு அனுப்பி எஸ்ட்ரா ஆக்ட்டிவிட்டி கத்துக் கொடுக்கிற மாதிரி அவர்களுக்கு ஒரு தற்காப்பு கலையையும் கத்துக்கொடுக்கணும்!
தேவையான சமயத்துல உதவி செய்ய யாரும் இல்லனாலும், கடமையை செய்ய வேண்டிய சட்டம் கண்ணை மூடியிருந்தாலும், ஏன்? நம்மை படைச்ச கடவுளே அந்நேரத்துல காப்பாத்த வரலைனாலும் நம்ம குழந்தைகளுக்கு நாம சொல்லிக்கொடுக்கிற தற்காப்பு கலை கைகொடுக்கும்!” என்று வீராவேசமாக பேசிய சாருமதி,
“இனி வரும் காலத்துலயாவது எந்த ஒரு பிஞ்சி குழந்தைகளும் வஞ்சவர்கள் கிட்ட மாட்டக்கூடாதுன்னு கடவுளை வேண்டிக்குவோம்!” என முடித்தவள் இறுதியில்,
“இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கலைனாலும் பரவாயில்லை. உங்க குழந்தைகளை ஒருமுறையாவது பார்க்க வையுங்க.
அண்ட் இதுவரைக்கும் நம்ம சேனலை யாராவது சப்ஸ்க்ரைப் பண்ணாம இருந்திங்கன்னா? மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணிட்டு பெல் பட்டனையும் கிளிக் பண்ணுங்க. அப்பதான் அடுத்து நான் போடுற வீடியோவோட நொடிஃபிகேஷன் உங்களுக்கு தொடர்ந்து வரும்.
இதேபோல் மற்றொரு வீடியோவில் உங்களை சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது,
சாரு!” என அந்த காணொளி முடிந்தது.
சாருமதியின் அந்த விழிப்புணர்வு வீடியோ தான் அன்றைய யூடியூபில் வைரலாக ஓடிக்கொண்டிருந்தது.
‘நம் தனிப்பட்ட விஷயங்களை போட கூடாது!’ என்று வலியுறுத்தியதை தவிர்த்து தேவா எங்கும் எதிலும் சாருமதியை கட்டுப்படுத்தவே இல்லை.
உனக்கு பிடிக்கிறதா செய்! நான் துணையிருக்கேன்! என்று சாருமதியின் வளர்ச்சிக்கு சொல்லால் அல்லாமல் செயலால் அவனால் முடிந்த உதவியை செய்தான், செய்து கொண்டிருக்கிறான், இனியும் செய்வான்.
இப்படியே சண்டையும் சமாதானமுமாக, அன்பும் அரவணைப்புமாக, காதலும் மோதலுமாக அவர்கள் வாழ்க்கை வண்ணமயமாக சென்றுக் கொண்டிருந்தது.